
நுவரெலியா டிப்போவில் கடமையாற்றிய காவலாளியை கொலை செய்து டிப்போவில் வைப்பிலிடப்படவிருந்த சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (06) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
டிப்போவில் காவலாளியாக பணியாற்றிய நுவரெலியா கல்வே பிரதேசத்தை சேர்ந்த கே.லோகேஸ்வரன் என்ற 85 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் காவலாளியை கொலை செய்து டிப்போவில் இருந்த அலுமாரியில் இருந்த சுமார் ஒன்பது இலட்சம் ரூபாயை சில குழுக்கள் எடுத்துச் சென்றதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட காவலாளி தனது பாதுகாப்பு அறையில் தங்கியிருந்த போது சில கும்பல் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கி பணத்தை எடுத்துச் சென்றதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இக்கொலைச் சம்பவத்தின் போது, டிப்போ நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் காசாளரும் டிப்போவில் தங்கியிருந்த போதிலும், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.