
குழந்தைகளிடையே இன்ஃபுளுவென்சா, சிக்கன்குன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை விசேட வைத்தியர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் அதிகரித்து வருவதாகவும் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர் சுட்டிக்காட்டினார்.
டெங்கு மற்றும் சிக்கன்குனியா அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு ஆபத்தானது என்றும், சிக்கன்குன்யா ஏற்பட்ட பிறகு மக்கள் பல மாதங்களுக்கு மூட்டு வலியால் அவதிப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டால், அது தீவிரமாக இருக்கலாம் என்றும், இந்நிலை கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தையையும் பாதிக்கலாம் என்றும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றைய காலகட்டத்தில் இன்ஃபுளுவென்சா நோய்களும் அதிகரித்து வருவதாலும், இந்த நோய் குழந்தைகளிடையே வேகமாகப் பரவக்கூடும் என்பதாலும் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டார்.