
பொசன் விழாவை முன்னிட்டு, நாளை (09) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை பல விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து அநுராதபுரம் வரை 20 ரயில் பயணங்களும், அநுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை 36 ரயில் பயணங்களும் இயக்கப்படவுள்ளதாகவும், இவை அனைத்தும் ஒரு தனியார் நிறுவனத்தின் முழு நிதி ஆதரவுடன் இயக்கப்படுவதால், இந்த அனைத்து ரயில் பயணங்களும் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த விசேட ரயில் சேவைகளுடன் இணைந்து தங்குமிட வசதிகள் மற்றும் பிற வசதிகளை மேம்படுத்துவதற்கும் ரயில்வே திணைக்களம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, அநுராதபுரத்திற்கு வரும் பக்தர்களுக்காக பல இடங்களில் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வசதிகளை ரயில் நிலையங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.