முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என்ற புலனாய்வு அறிக்கையின் பின்னரே அவர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது. அடுத்த மீளாய்வு புலனாய்வு அறிக்கை கிடைத்தப் பிறகு தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மேலும் குறைக்கப்படலாம் என்று அமைச்சர் கிருஷாந்த அபேசேன(Chrishantha Abeysena) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் நிலவும் தட்டுப்பாடுகளுக்கு தீர்வு காணப்படும்.

அரசியலில் இருந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் போலியான பல குற்றச்சாட்டுக்களை தற்போது முன்வைக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் கிடையாது என்று புலனாய்வு அறிக்கை கிடைத்ததன் பின்னரே வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு மீளப் பெறப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 60 பொலிஸார் என்ற அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த மீளாய்வு அறிக்கையில் பாதுகாப்பு மேலும் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டால் வழங்கப்பட்டுள்ள 60 பொலிஸாரின் பாதுகாப்பை 30 ஆக குறைக்கலாம்.மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

முன்னாள் ஜனாதிபதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் என்று ஊடகங்களில் குறிப்பிட்ட தரப்பினர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களை பாதுகாப்பு தரப்புக்கு அளிக்க வேண்டும்.

அப்போதுதான் அது குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *