சட்டத்தை செயற்படுத்தவே மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியுள்ளனர். எனவே தேவையற்ற எச்சரிக்கைகளைக் கண்டு அஞ்சப் போவதில்லை அமைச்சர் லால்காந்த(K.D. Lalkantha) தெரிவித்துள்ளார். அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் தங்களது துறையில் மறுசீரமைப்புக்களை செய்யக்கூடாது என எதிர்பார்க்கின்றனர். அப்படி நினைத்தால் மாற்றங்களைச் செய்ய முடியாது எனவும் சுட்டிக்காட்டினார். கண்டியில் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,இந்நாட்டில் சிறந்த அரசியல் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்ப பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. காலிமுகத்திடல் அரகலய போராட்டம் அதில் முக்கியமானது. அதன் பலனாகவே இன்று தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்துள்ளது.அரசியல் போன்றே ஏனைய துறைகளிலும் சிறந்த மாற்றமொன்றை உருவாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

இந்நிலையில் ஏதேனும் ஒரு தொழில்துறையில் இருப்பவர்கள் தங்கள் தொழில்துறையில் கை வைக்காமல் ஏனைய தொழில்துறையினர் மீது கைவைத்தால் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறாகும்.

அரசாங்க உத்தியோகத்தர்கள், போக்குவரத்து பேருந்து தொழிற்சங்கத்தினர், மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள், பொலிசார் என ஒவ்வொரு துறையினரும் தங்கள் துறைகளில் கைவைக்கக் கூடாது என்று எதிர்பார்க்கின்றனர்.

அப்படிச் செய்தால் எந்தவொரு துறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. கடந்த காலங்களில் ஊடகங்கள் என்னைப் பற்றி அபாண்டமான செய்திகளை வெளியிட்டிருந்தன.

ஊடகங்கள் காரணமாக நான் ஏராளமான பாதிப்புகளை எதிர்கொண்டிருந்தேன். ஏனைய துறைகளைச் சேர்ந்தவர்களும் இவ்வாறே நடந்து கொள்கின்றனர்.

எங்கள் மேல் கை வைத்தால் வேலைநிறுத்தம் செய்வோம் என்று எச்சரிக்கின்றனர்.நாங்கள் அதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை.

சட்டத்தை செயற்படுத்தவே எங்களுக்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளார்கள். நிச்சயமாக நாங்கள் அதனை நிறைவேற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *