பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (16) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (16) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சாமர சம்பத் மாகாண முதலமைச்சராக இருந்தபோது, அரசாங்கத்திற்கு 1.76 பில்லியன் ரூபாவிற்கு மேல் இழப்பை ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பாக ஆஜரான அதிகாரி தெரிவித்தார்.

பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2015 ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, மாகாண சபைகளின் நிலையான வைப்புத்தொகையை முன்னர் திரும்பப் பெற திறைசேரி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டதாகவும், அந்த சுற்றறிக்கையின்படி சாமர சம்பத் தசநாயக்க எடுத்த நடவடிக்கை சட்டவிரோதமானது அல்ல என்றும் கூறினார்.

எனினும், அது தொடர்புடைய சுற்றறிக்கை 2016ஆம் ஆண்டு நவம்பர் 22 திகதியன்று வெளியிடப்பட்ட போதிலும், சாமர சம்பத் தசநாயக்க பெப்ரவரி மாதம் 29ஆம் திகதியன்று குறித்த நிதியை திரும்பப் பெற்றதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

அதன்படி, சாமர சம்பத் குறித்த நிதியை திரும்பப் பெற்ற நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டது போன்ற எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அழைத்தது, மேலும் சம்பந்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்ட திகதி மற்றும் நேரம் குறித்து தெரியாமல் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு இந்தக் கருத்தை வெளியிட்டார் என்பது தெரியவந்தது என்று அந்த அதிகாரி கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தேக நபரான சாமர சம்பத்தின் மனைவியின் வேண்டுகோளின் பேரில் இந்த ஊடக மாநாட்டை நடத்தியதாகவும், அதன்படி, சந்தேக நபர் சாமர சம்பத் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதால், அவரது பிணையை இரத்து செய்து அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

அதன்படி, இந்தக் கோரிக்கையை இன்று பிற்பகல் பரிசீலிக்க தலைமை நீதிபதி தீர்மானித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *