
இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் விருந்தினர் திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறவேற்ற இலங்கையிலிருந்து செல்லும் பயணிகளை வழியனுப்புவதற்கான வைபவம் நேற்று (26) இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கௌரவ காலித் பின் ஹமூத் அல்காத்தானி அவர்கள் தலைமையில் தூதரகத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வின் போது, தூதுவர் அவர்கள் உரையாற்றுகையில்,இந்த திட்டத்திற்காக இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களுக்கும், முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களுக்கும் தனது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தார்.
உலகம் முழுவதிலுமிருந்து வரும் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு, குறிப்பாக நட்பு நாடான இலங்கையிலிருந்து இம்முறை வரும் புனிதப் பயணிகளுக்கு சவூதி அரசாங்கம் காட்டும் மிகுந்த அக்கறையையும் கரிசனையையும் பாராட்டினார்.
இந்த நன்கொடைத் திட்டத்தில் பங்கேற்க ஹஜ் புனிதப் பயணிகளின் தேர்வு கவனமாகவும் நுணுக்கமாகவும் மேற்கொள்ளப்பட்டதாக கௌரவ தூதவர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
இக்குழுவில் இலங்கையின் பல் துறை அறிஞர்கள், இமாம்கள், கல்வியாளர்கள், ஊடகத்துறை சார்ந்தவர்கள், சமூகத்தின் முன்னணி நபர்கள், மற்றும் முஸ்லிம் சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க சேவைகளை வழங்குகின்ற ஆண்களும் பெண்களும் அடங்குகின்றனர்.
இந்த கௌரவ அன்பளிப்பானது அவர்களின் பங்களிப்புகளுக்கான அங்கீகாரமாகவும், எதிர்காலத்தில் அவர்களது சேவைக்கான ஊக்கமாகவும் அமைகிறது.
இந்தப் புனிதத் திட்டத்தில் பங்கேற்பது ஹஜ் கிரியை நிறைவேற்றுவதற்கான அளப்பரிய ஆன்மிக வாய்ப்பை மட்டுமன்றி , ஒரு பொறுப்பையும், நம்பிக்கையையும் வெளி ப்படுத்துகிறது என்றும் தூதுவர் அவர்கள் குறிப்பிட்டார்.
ஹஜ் பயணிகள் தங்கள் தாய் நாட்டினை பிரதிநிதித்துவப் படுத்தும் சிறந்த தூதர்களாக இருக்க வேண்டும் என்றும், சவூதி அரேபிய அரசாங்கம் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு வழங்கும் இந்த உயர் சேவையையும் முழுமையான கவனிப்பையும் பொறுப்புடன் தாய்நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் நாட்டை சிறந்த முறையில் பிரதிநிதித்துவப்படுத்தவும், தங்கள் செயற்பாடுகள் பண்பாடுகள் மூலம் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய கௌரவமான விம்பத்தை தொடர்ந்தேர்ச்சையாக முன்னெடுக்க வேண்டுமென்றும் ஹஜ் பயணிகளுக்கான சவூதி அரசின் அளப்பரிய முயற்சிகளையும் சேவைகளையும் வெளிப்படுத்தும் உண்மையான குரலாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, இந்த ஹஜ் பயணம் பயணிகள் அனைவருக்கும் வெற்றிகரமாக அமையவும், அவர்களின் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படவும், அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு பாதுகாப்பாக திரும்பவும் வேண்டும் என்றும் கௌரவ தூதுவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்.