அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சாரச் சட்ட மூலத்திலுள்ள சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக்கோரி இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 06 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர்நீதிமன்றம் நேற்று (02) உத்தரவிட்டது.

நீதியரசர்கள் ஏ.எச்.எம்.டி. நவாஸ், அர்ஜுன ஒபேசேகர, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட அமர்வு முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதன்போதே இந்த மனுவை எதிர்வரும் 6ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு அமர்வு உத்தரவிட்டது.

முன்மொழியப்பட்ட சட்டமூலம் இலங்கை மின்சார சபையை தனியார்மயமாக்க முன்மொழிகிறது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்குவதன் மூலம் ஊழியர்களின் சேவையை நிறுத்துவதென்பது தொடர்பான தெளிவான உத்தரவு சட்டமூலத்தில் இல்லை என்றும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மசோதாவிலுள்ள சில பிரிவுகள் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, தொடர்புடைய சட்டமூலம் நிறைவேற்றப்படவேண்டுமானால், அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் சர்வசன வாக்கெடுப்பு மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று தீர்ப்பளிக்க வேண்டும் என்று மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *