
இலங்கையில் மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் 3 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
எனவே அவற்றுக்கு முன்னுரிமையளித்து அதன் பின்னரே மாகாண சபைத் தேர்தல் குறித்து தீர்மானிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (17.06.2025) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாணசபைத் தேர்தல் குறித்து ஸ்திரமான தீர்மானம் ஒன்று எடுக்கப்படவில்லை.
சுமார் 8 மாத காலப் பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பன நடத்தப்பட்டுள்ளன.
தற்போது மக்கள் எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய செயற்பட வேண்டும்.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
இந்த அனைத்துக் காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டுதான் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான காலம் தீர்மானிக்கப்படும்.
அதற்கு முன்னர் இதனுடன் தொடர்புடைய சட்ட திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.