
இஸ்ரேலினால் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் தற்பொழுது ரஸ்யாவிற்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஈரானின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை சுய பாதுகாப்பு நடவடிக்கையாக நியாயப்படுத்தும் ஜீ7 நாடுகளின் அறிக்கையை, அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் நடைபெற்ற வால்டேய் கலந்துரையாடல் குழு “Valdai Discussion Club” சுற்றுவட்ட கலந்துரையாடலில் உரையாற்றிய போது ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனை “சுய பாதுகாப்பு” என G7 கூறுவது ஏற்க முடியாதது எனக் கூறியுள்ளார்.இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான உலக ஒழுங்கு இன்று சிதைந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
புதிய சக்தி மையங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, யூரேசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உருவாகிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பிறகு, IMF போன்ற பன்னாட்டு அமைப்புகள், இராணுவ சக்திகள், அரசியல் அங்கீகாரம் இல்லாத அமைப்புகள் போன்றவை புதிய அதிகார அமைப்புகளாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடுகளுக்கிடையிலான சிக்கல்களில் சர்வதேச சமநிலையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புடன் உலக சக்திகள் நடக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்