
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 8,000 முதல் 10,000 பேர் வரை காசநோயினால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாகக் கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாசநோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர் துஷ்மந்த மெதகெதர தெரிவித்துள்ளார்.உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 இலட்சம் பேர் காசநோயினால் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒருவர் வீதம் உலகின் ஏதோவொரு பகுதியில் இந்த நோய்க்கு ஆளாவதாக புள்ளிவிபரங்கள் ஊடாக அறியமுடிகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுவாசிக்கும் எந்தவொரு நபரும் இந்த நோய்க்கு ஆளாகக்கூடும் எனவும் வேறு எந்த விசேட காரணிகளும் இல்லை எனவும் சுவாசநோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர் துஷ்மந்த மெதகெதர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வவுனியாவில் இன்றைய தினம் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா, வைத்தியசாலை உள்வட்ட வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் ஆரம்பித்த குறித்த ஊர்வலமானது
யாழ்ப்பாணம் வீதியை அடைந்தது.பின்னர் குறித்த ஊர்வலமானது வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஊடாக கண்டி வீதியால் சென்று மணிக்கூட்டுக் கோபுர சந்தி ஊடாக பசார் வீதியை அடைந்து ஹொரவப்பொத்தானை வீதியால் வைத்தியசாலையை சென்றடைந்துள்ளனர்.
இதன்போது காசநோயைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.