
புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதோடு, நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பின் ஊடாக முரண்பாடற்ற நிரந்தர தீர்வை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பு உருவாக்கம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது, “பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். இந்தச் சட்டத்துக்கு எதிராகவே நாங்கள் செயற்பட்டோம்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கும், நடைமுறைக்குச் சாத்தியமான வகையில் புதிய சட்டத்தை இயற்றுவதற்கும் கடந்த அரசுகள் மேற்கொண்ட பணிகள் குறித்து தீவிர கரிசனை கொண்டுள்ளோம்.
தேசிய பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பாதுகாப்பு தொடர்பான சட்டம் இயற்றப்படும். நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட குழு கடந்த வெள்ளிக்கிழமை கூடியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது அரசின் கொள்கை.
ஆகவே, இந்தச் சட்டத்தை இரத்துச் செய்து, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்பதை குறித்த குழுவின் முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளேன்.
புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் ஊடாக நிரந்தர தீர்வை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம்.
காலம் காலமாக தொடரும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே வடக்கு, கிழக்கு மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குச் சிறப்பு ஆணை வழங்கியுள்ளார்கள்.
பொருளாதார ஸ்திரப்படுத்தலுடன் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாகாண சபைத் தேர்தலை நடவத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.