
அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதியின் கூற்றை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
பரஸ்பர தீர்வை வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு அரசாங்கத்தால் எவ்வாறு முடிந்தது என ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி அறவிடப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்தது.
குறித்த வரியிலிருந்து நிவாரணம் பெறும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதுடன், இது தொடர்பான கலந்துரையாடலுக்காக இலங்கை குழுவொன்று அமெரிக்காவிற்குச் சென்றது.
இந்நிலையில் இலங்கை குழுவின் பேச்சுவார்த்தை வெற்றியளித்ததாகவும், இது தொடர்பிலான முடிவுகள் விரைவில் கூட்டு அறிக்கையில் அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி நேற்று இரத்தினபுரியில் தெரிவித்தார்.
அமெரிக்கா தற்போது சீனாவையும், வேறு பெரிய நாடுகளையும் முன்னிலைப்படுத்திக் கலந்துரையாடி வருவதாகச் சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க,அமெரிக்கா முதலில் பெரிய நாடுகளைக் கவனித்து விட்டு பின்னர் தான் சிறிய நாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்கையில் இலங்கை அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை மாத்திரம் வெற்றியளித்தது எவ்வாறு சாத்தியம் என ரணில் விக்ரமசிங்க கண்டியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது கேள்வியெழுப்பினார்.