
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிவரை 13,759 வாக்களிப்பு நிலையங்களில் பலத்த பாதுகாப்புடன் இடம்பெறவுள்ளது.
2025 மார்ச் மாதம் 03ஆம் திகதி மற்றும் 10 ஆம் திகதி தேர்தல் அறிவிப்பு விடுக்கப் பட்ட 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களுக்கமைய 49 அரசியல் கட்சிகள் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றன.
அரசியல் கட்சிகளின் சார்பில் 2404 குழுக்களும் சுயாதீன குழுக்களாக 257 குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன. 75,589 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
அத்தோடு ஒரு கோடியே 71 இலட்சத்து 56ஆயிரத்து 338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
அதற்கமைய, நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள் ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலேயே வாக்களிப்பு இடம்பெறும்.
அதற்கமைய, தொகுதி அடிப்படையில் 5,052 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதுடன் பட்டியல் முறையினூடாக (போனஸ் ஆசனங்கள்) 3,235 பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுவார்கள். மொத்தமாக 8,287 பிரதிநிதிகள் தெரிவு செய்யப் படுவார்கள்.
அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள்ளேயே இருக்கிறார்கள்.
3 இலட்சத்து 94 ஆயிரத்து 533 வாக்காளர்கள் இருக்கிறார்கள். மிக குறைந்த வாக்காளர்கள் எண்ணிக்கை கொண்ட உள்ளூராட்சி சபையாக அப்புத்தளை நகர சபை கருதப்படுகிறது.
அந்த சபையில் 3,051 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
அதன் பிரகாரம் வாக்குச் சாவடிகளில் தேர்தல் கடமையில் ஈடுபடும் அதிகாரிகளை மற்றும் தேவையான பொருட்களை பெற்றுக் கொடுக்கும் பணிகள் நேற்று (05) நிறைவு செய்யப் பட்டிருந்ததுடன் முன்னாயத்த செயற்பாடுகளும் நிறவுசெய்யப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
தொகுதி உதவி தெரிவத்தாட்சி அதிகாரியின் மேற்பார்வையில் கீழ் இந்த சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்லும் போது தேசிய அடையாள அட்டை அல்லது அனுமதிப் பெற்ற அடையாள அட்டையொன்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுடன் வாக்காளர் அட்டையை இன்று தபால் அலுவலகங்கள் அல்லது உப தபால் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும்.
2 இலட்சம் அரச உத்தியோகத்தர்கள் கடமையில்
இது தேசிய மட்ட தேர்தல் இலலை என்பதால் இம்முறைத் தேர்தலில் வெளிநாட்டு காண்காணிப் பாளர்கள் பங்குப்பற்றமாட்டார்கள் என்பதுடன உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களான பெப்ரல், கெபே, ஐரிஸ், சி.எம்.இ.வி, வீவ் போன்ற நிறுவனங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன. அதற்கமைய, 4,000 இற்கும் அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடு கின்றனர்.
இம்முறைத் தேர்தலில் தேர்தல் கடமைகளுக்காக 2,25,000 வரையான அரச உத்தியோகத்தர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்காளர்களுக்கான விடுமுறை
மூன்றாம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் இன்று (06) வரை தேர்தல் அமைதிகாலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த காலபகுதிக்குள் தேர்தல் பிரசாரம், வேட்பாளர் ஒருவரை விளம்பரப்படுத்துதல் அல்லது இழிவுபடுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித் துள்ளது.
வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்லும் தூரத்தின் அடிப்படையில் விடுமுறை பெற்றுக்கொடுப்பது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகும்.
தனியார் துறையை பொறுத்தவரையில் 40 கிலோமீற்றர் அல்லது அதனை விட குறைவான தூரமென்றால் அரை நாள் விடுமுறையும் 40 – 100 மீற்றர் தூரத்துக்கு ஒரு நாள் விடுமுறையும் 100 – 150 கிலோமீற்றர் தூாத்துக்கு இடையில் ஒன்றரை நாள் விடுமுறையும் 150 கிலோமீற்றர் தூரத்துக்கும் அதிகமென்றால் இரண்டு நாள் விடுமுறையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
மேலும், அரச மற்றும் தனியார் பல்கலைக்கழக பணியாளர் குழாம், மாணவர்கள், தனியார் உதவி வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர் கள், தொழிற்சாலை உள்ளிட்ட சகல தொழிற் சாலை பணியாளர்களுக்கும் விடுமுறை பெற்றுக்கொடுப்பது அந்தந்த நிறுவனங்களின் பொறுப்பாகும்.
73,000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
அதேபோன்று உள்ளூராட்சி தேர்தலுக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித் துள்ளது.
தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காகவும் நீதியான தேர்தலை நடத்துவதற்காகவும் 65, 000 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய, 73,000 வரையான பொலிஸ் அதிகாரிகள் களத்தில் செயற்படுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனதுங்க தெரிவித்தார்.
இவர்கள் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பு, வீதி போக்குவரத்து கடமைகள், வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கும் வகையில் நடமாடும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கலகமடக்கும் பொலிஸாரும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன், தற்போது வரையில் 564 தேர்தல் சட்ட முறைக்கேடு தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த முறைப்பாடுகள் குறித்து 54 வேட்பா ளர்களும் 204 ஆதரவாளர்களும் கைதுசெய் யப்பட்டு அவர்கள் தொடர்பில் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பின்னரான வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத் துவதற்காகவும் கலகமடக்கும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படை அதிகாரிகள் 2,337 பேர் கடமையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அவசர நிலைமைகளின் போது முப்படைகளின் உதவியை பெற்றுக்கொள்வதற்காக முப்படையி னரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
9, 906 சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிளும் பாதுகாப்பு கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி யுள்ளார்கள்.
வாக்களிப்பு இடம்பெறும்போது வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் அந்த செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு தேவையான பாதுகாப்பும் பெற்றுக்கொடுக்கப்படும்.
எவ்வாறு சரியாக வாக்கு பிரயோகிப்பது?இந்தத் தேர்தலில் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தனித்தனி வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.
அந்த வாக்குச் சீட்டுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் பெயர் உள்ளிடப்பட்டிருக்கும்.
அந்த பெயர்களின் எதிரில் அந்த கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அவற்றின் சின்னங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த சின்னத்துக்கு முன்னாள் இருக்கும் வெற்றுப் பெட்டியில் குறுக்கு கோடிட்டு வாக்களிக்க வேண்டும்.
குறுக்கு கோட்டுக்கு அப்பால் வாக்குச் சீட்டில் வரைதல், எழுதுதல், பெயர் எழுதுதல் போன்ற எந்தவொரு செயற்பாடும் மெற்கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும். அதேபோன்று விரும்பிய ஏதாவதொரு கட்சி அல்லது சுயதீன குழுவுக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும்.
வாக்களிப்பு நிலையங்களில் செய்யக்கூடாதவை
வாக்களிப்பு நிலையங்கள் அல்லது வாக் கெண்ணும் நிலையங்களில் கையடக்கத் தொலை பேசியை பயன்படுத்துதல், புகைப்படமெடுத்தல், வீடியோ படமெடுத்தல், ஆயுதங்களை தம்வசம் வைத்திருத்தல்,புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதுல் மற்றும் வேறு போதைப்பொருள் பயன்படுத்துதல், மதுபானம் அல்லது போதைப்பொருள் அருந்திவிட்டு வருதல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அதேபோன்று தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களை அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் புகைப்படமெடுத்தல், வீடியோ படமெடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் பதிவிடுதல் தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும்.