
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், புத்தளம் பௌத்த மத்தியஸ்தானத்திற்கு அருகில் நேற்று (09) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம், பாலாவி, ஹஸைனியாபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டிலிருந்து வியாபார நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வவுனியாவிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து புத்தளம் தலைமையக பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திலும் வைத்தியசாலையிலும் மரண விசாரணையை மேற்கொண்ட புத்தளம் பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.
இந்த விபத்து தொடர்பாக தனியார் பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் புத்தளம் தலைமையக பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.