நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எடுத்த முடிவு தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (29) உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பைச் செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பளிக்கக் கோரி மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித் பெரேரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

நீதியரசர்கள் துரைராஜா, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான தொடர் புடைய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கில் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, இந்த வழக்கில் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்டு, மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வு, மனு மீதான விசாரணையை ஓகஸ்ட் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் 19 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளில் தண்டனையை அனுபவிக்க உத்தரவிட்டதாக மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதனை உயர் நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்ததாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், ஞானசார தேரருக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடிவு செய்தார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி அத்தகைய மன்னிப்பை வழங்குவதில் அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட சட்ட நடைமுறையைப் பின்பற்றவில்லையென்று மனுதாரர்கள் சாடுகின்றனர்.

இதனால், தங்கள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறும் சம்பந்தப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை செல்லாததாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *