புதிய கொரோனா வைரஸ் விரைவாகப் பரவலடைகிறதா என்பதை ஆராய்வதற்காக நாடு முழுவதும் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் பல நாடுகளில் மீண்டும் பரவலடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனஞ்செலுத்தி செயற்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போது வரையில் கொழும்பு மருத்துவ பரிசோதனை நிறுவனத்தில் மாத்திரம் பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்று வரும் நிலையில், எதிர்காலத்தில் கொழும்பு மற்றும் காலி தேசிய வைத்தியசாலைகள், மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை, அநுராதபுரம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலை, ஜயவர்தனபுர மற்றும் பேராதெனிய பல்கலைக்கழக பீடங்களிலும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடத்துடன ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் முடிவடைந்த இதுவரையான காலப்பகுதியில் கொரோனா, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் தொற்றுக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்காலத்தில் 5,000 சிக்குன்குனியா நோய் நிலைமையை அடையாளம் காண்பதற்கான தொகுதிகளைக் கொள்வனவு செய்வதற்கும் சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (28) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,‘‘கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பில் அதிக கவனஞ்செலுத்தி வருகிறோம்.

மீண்டும் தொற்று நோயியல் பிரிவு உள்ளிட்ட குழுக்களுடன் தற்போதைய சந்தர்ப்பத்தில் சுகாதாரக் கட்டமைப்பில் என்ன செய்ய வேண்டுமென்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.

இருந்தபோதும், மக்கள் அச்சம் கொள்ளுமளவுக்கு நிலைமை இல்லை. அதற்கென்று இலங்கைக்குள் கொரோனாத் தொற்று ஏற்படாதென்று கூறமுடியாது.

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.

உலகில் கொரோனாத் தொற்று நிலைமையின் தீவிரம் குறைவடைந்திருந்தாலும் அதன் பின்னர் தொடர்ந்து உலக மட்டத்தில் கொரோனாத் தொற்று நிலைமை இருந்துகொண்டேதான் இருந்தது.

கடந்த நில வருடங்களை எடுத்துக்கொண்டால் மே, ஜூன் மாதங்களிலேயே கொரோனாத் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

ஆசிய நாடுகளிலேயே தற்போது கொரோனா நிலை அதிகரித்துக் காணப்படுகிறது. முக்கியமாக சிங்கப்பூரில் அதிகரித்துள்ளது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு கண்டி, காலி தேசிய வைத்தியசாலைகளினூடாகவும் ஏனைய போதனா வைத்தியசாலைகளிலும் பி.சி.ஆர். பரிசோதனை வசதியுள்ள வைத்தியசாலைகளில் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

அதேபோன்று, காய்ச்சல் நிலைமை தொடர்பிலான கண்காணிப்புக்காக வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளிலும், தங்கி சிகிச்சைபெறும் நோயாளர்களிடம் அளவுகோல் முறையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனூடாக கொரோனா நிலைமை எவ்வாறிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

புதிய திரிபின் தாக்கம் எவ்வாறிருக்கிறது எனபதையும் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

புதிய திரிபு மரணத்தை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்ட திரிபும் இல்லை’’ என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *