
நீர்கொழும்பின், பிட்டிபன பகுதியில் இருந்து ஒருதொகை கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 மற்றும் 42 வயதுடைய மன்னார் – பேசாலையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையின் களனி கடற்படையினருடன், துன்கல்பிட்டிய பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த கேரளக் கஞ்சாவுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறியொன்றை படையினர் சோதனை செய்துள்ளனர்.
இதன்போது, குறித்த லொறியில் இருந்து ஐந்து உரப் பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 187 கிலோ 875 கிராம் கேரள கஞ்சா இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த கேரளக் கஞ்சா வியாபாரத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சொகுசுக் கார் ஒன்று கெசல்வத்தை பகுதியில் வைத்து துன்கல்பிட்டிய பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரால் சோதனை செய்யப்பட்டது.
இதன்போது குறித்த சொகுசு காரில் ஒன்பது பார்சல்களில் அடைக்கப்பட்ட 18 கிலோ 83 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு துன்கல்பிட்டிய பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவின் பெறுமதி 82 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, லொரி , சொகுசுக் கார் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக துன்கல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.