
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறும் ஊடக அறிக்கைகளை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மறுத்துள்ளது.
வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் கிட்டத்தட்ட 75 சதவீத வாகனங்கள், ஏற்கனவே விற்பனையாகிவிட்டதாக இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே, நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன விடயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்கள் ஊடாக, ஏற்கனவே கிட்டத்தட்ட 7,000 புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் வரை, மக்கள் ஐந்து ஆண்டுகளாகக் காத்திருந்தமையால், புதிய வாகனங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன வரிகள் மற்றும் ஜப்பானிய யென் விகிதத்தில் அதிகரிப்பு ஆகிய இரண்டும் வாகன விலை உயர்வுக்கு பங்களிக்கும் காரணிகளாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜப்பானிய ஆல்டோ மற்றும் வேகன் ஆர் போன்ற சிறிய வாகனங்கள் மற்றும் ஐரோப்பிய வாகனங்களுக்கான அதிக தேவை இருப்பதாக மானகே தெரிவித்துள்ளார்.