
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது வரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம், விசேட அதிரடிப்படையினர் பங்கேற்றுள்ளதுடன், வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டது. தற்போது மீட்கப்பட்ட இரண்டு மாணவர்களின் சடலங்களும், சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளன.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திம் வெள்ள நீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு காணாமல் போயினர்.
பின்னர் கல்முனை பொதுமக்கள் மாளிகைக்காடு ஜனாஸா நலம்புரி அமைப்பினர் உட்பட கல்முனை கடற்படையினரின் உதவியுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த மீட்புப்பணியின்போது அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தை பிடித்திருந்த மாணவர்கள் சிலரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
மேலும் இந்த விபத்தில் 06 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தற்போது காணாமல் போயுள்ள நிலையில், இருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன், எஞ்சிய நான்கு பேர் இன்னும் மீட்கப்படவில்லை.
அத்துடன் நள்ளிரவு தாண்டியதன் காரணமாக மீட்புப்பணி இடைநடுவில் கைவிடப்பட்டது.
பின்னர் இன்று (27) காலை முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நிந்தவூர் மதரஸா பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வெள்ளம் காரணமாக விபத்துக்குள்ளானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.